எந்தவொரு Data தரவுக் கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இம் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
இதேபோன்று, எல்.எம்.எஸ் முறையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்குரிய திட்டம் ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4G தொழில்நுட்பத்துடன் 10,000 பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கல்வியை அணுகுவதில் கிராமப்புறங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
அத்துடன், சரியான திட்டமின்றி சில பகுதிகளில் தொலைபேசி நிறுவனங்களால் தொலைபேசி கோபுரங்கள் கட்டப்படுவதால் இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.