மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதால் ஏற்பட்ட கால தாமதமும் மற்றும் மரண சான்றிதழ்கள் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் தாமதமாக வெளியிடப்படுகின்றன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக நாளாந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்தன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் தாமததாக செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியிலேயே இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை முடிந்த வரையில் முழுமைப்படுத்த முயற்சித்தோம்.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியால காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாலங்களில் மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்