இந்தியாவில் பரவி வரும் டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தெமட்டகொட – ஆராமய பகுதியில் மேலும் 15 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த பகுதியில் டெல்டா கொவிட் திரிபுடன் ஏற்கனவே 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
டெல்டா கொவிட் திரிபானது இலங்கையில் தற்போது பரவி வரும் B 117 வைரஸ் திரிபை விட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போது நாட்டில் கொரோனா வைரசின் டெல்டா என்ற அதிபயங்கர திரிபு சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு மூன்று முக்கியத் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தகவல்படி, டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்ட இடங்களை உடனடியாக தனிமைப்படுத்தல் மற்றும் அங்கிருந்து மாதிரிகளைப் பெற்று சோதனைக்கு உட்படுத்தல் முதலாவது தீர்மானமாகும்.
டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களது முதல் தொடர்பாளர்களை தேடுதல் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தல் இரண்டாவது தீர்மானமாகும்.
மூன்றாவதாக, நாட்டின் ஏனையப் பகுதிகளில் டெல்டா திரிபுடன் யாரும் உள்ளனரா? என்பது தொடர்பில் விரைவான பரிசோதனைகள் மூலம் அறிவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.