நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு முன்னால் உள்ள ஒழுங்கையில் மீன் வியாபாரம் செய்த ஆறு மீன் வியாபாரிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய கொவிட் தொற்றின் காரணமாக பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்ட காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளனர். இந் நிலையில் தேவையற்ற வகையில் வியாபாரம் செய்வதனால் மக்கள் ஒன்று கூடி நின்றனர். அப்படியான சூழ்நிலையில் மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் அவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் அது சம்பந்தமான வியாபார பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே நல்லூர் பிரதேசசபையால் இப்படியான வியாபார நடவடிக்கைகளை மக்களை திரட்டி செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தநிலையில் வியாபாரிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக அப்பகுதியில் வியாபாரம் மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.