வவுனியாவில் பேக்கரி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி இருந்ததை அடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது , வவுனியா பட்டக்காடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பாணினை வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்டு வரும் போது வேப்பங்குளம் பகுதியில் வாகனத்தை மறித்து நபர் ஒருவர் பாணினை வாங்கியுள்ளார்.
வாங்கி வந்த பாணினை உண்பதற்காக எடுத்த போது அதனுள் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றின் மூடி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதுடன், பாணும் சுகாதாரப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனைப் பெற்று முறைப்பாட்டை பதிவு செய்த சுகாதாரப் பிரிவினர், கொவிட் அச்சுறுத்தல் காலப்பகுதியில் வழங்கப்பட்ட பாஸ் அனுமதியைக் கொண்டு சுகாதார சீர்கேடான முறையில் குறித்த பேக்கரி இவ்வாறு செயற்பட்டுள்ளதாக பேக்கரிக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.