உடற்பயிற்சிக்காக வெளியில் சென்ற பொலிஸ் அதிகாரியின் மனைவியை தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே மற்றொரு வீதித் தடைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் பொரளை- மருதான வீதியில் உள்ள ஆனந்தா சந்திக்கு அருகே நடந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவி உடல் பயிற்சிக்காக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொரளை- மருதான பிரதான வீதிக்கு நடந்து செல்லத் தயாரானபோது வீதித் தடையில் கடமையில் இருந்த கொன்ஸ்டபிள், அதிகாரியின் மனைவியை தடுத்து நிறுத்தி, பயணக்கட்டுப்பாடு காரணமாக அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவி தான் என அந்தப் பெண் கூறி, வீதித்தடையை கடக்க முற்பட்ட போது, அனைவருக்கும் ஒரே சட்டம்தான் என கூறிய பொலிஸ் உத்தியோகத்தர், அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாதென கூறியுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அங்கு கூச்சலிட்டுள்ளார்.
உடனடியாக தனது கணவனான அதிகாரியை தொலைபேசியில் அழைத்த அந்த பெண், பொலிஸ் உத்தியோகத்தர் கேட்கும் விதமாக உரையாடி, அவரை திட்டியுள்ளார். பின்னர், அந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் பேசிய கணவரான உயரதிகாரி, தனது மனைவி உடற்பயிற்சிக்கு செல்ல அனுமதிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
அதற்கு கான்ஸ்டபிள், “ஐயா, போக்குவரத்து விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. பிறகு மற்றவர்களும் உடற்பயிற்சிக்கென வருவார்கள். அவர்களையும் விடுவதா?“ என கேட்டுள்ளார்.
அதை அனுமதிக்க முடியாதென கூறி, அந்த அதிகாரி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
இதற்கிடையில் பொலிஸ் அதிகாரியின் மனைவி வழக்கம் போல் பிரதான சாலையில் நுழைந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, கொன்ஸ்டபிளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அருகிலுள்ள வெறொரு பொலிஸ் வீதித் தடைக்யில் கடமைக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், 3 மணித்தியாலம் கழித்து பழைய வீதித்தடையில் கடமையாற்ற அந்த உத்தியோகத்தர் அனுமதிக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.