நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழில் 30க்கும் அதிகமானோர் கூடி கூட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்யாமல் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தமை தொடர்பில் பல தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை செல்வாக்கு , வசதி படைத்தவர்கள் விடயத்தில் சுகாதார பிரிவினரும் கண்டுகொள்ளாத நிலைமை தொடர்பிலும் அன்றாடம் தமது வாழ்க்கை செலவுக்காக உழைப்பவர்களை விரட்டுவதாகவும் , கைது செய்வதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மனோகரா சந்திக்கு அருகில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் 30க்கும் அதிகமானோர் கூடி கூட்டம் ஒன்றினை நடாத்தியுள்னர்.
சர்வதேச சேவை அமைப்பு ஒன்றின் இலங்கைக்கான வருடாந்த ஆளுநர் தெரிவில் போட்டியிடும் நபர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து யாழில் உள்ள குறித்த சேவை அமைப்பின் அங்கத்தவர்களை தனது குறித்த மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து தனக்கு ஆதரவு தரும்படி கோரியுள்ளார்.
குறித்த கட்டடத்திற்கு முன்பாக சொகுசு வாகனங்கள் நிற்பதனை மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாண பொலிஸார் கண்ணுற்று சந்தேகம் கொண்டு குறித்த கட்டடத்தினுள் சென்று பார்த்தனர் பார்த்த போது , அங்கு சுகாதார விதிமுறைகளை மீறி 30 க்கும் அதிகமானோர் கூடி இருந்தமையை கண்டுள்ளார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கடுமையாக எச்சரித்து விடுவித்ததுடன் , கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களிடம் வாக்கு மூலத்தையும் பெற்ற பின்னர் அவர்களையும் விடுவித்துள்ளனர்.
இதேவேளை இராணுவத்தினரும் குறித்த கூட்டம் தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்து இருந்தனர்.
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் இவ்வாறு கொழும்பில் இருந்து வந்த ஒருவர் யாழில் 30க்கும் அதிமானோரை மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து கூட்டம் கூட்டியுள்ளார். அவர் தொடர்பிலோ , அல்லது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையோ கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்காது வாக்கு மூலத்தை மட்டும் பெற்று விடுவித்து உள்ளனர்.
திருமண நிகழ்வுகள், பிறந்தநாள் நிகழ்வுகளை தங்கள் உறவினர்களுடன் கொண்டாடுபவர்கள் 14நாட்களுக்கு கட்டாய சுய தனிமைப்படுத்தும் சுகாதார பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் பாராமுகமாக இருப்பது பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் சுகாதர பிரிவினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பார்களா ? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.